Thursday, March 9, 2017

மீண்டும் பதிவுலகிற்கு..


வணக்கம், மிக மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் பதிவுலகிற்கு மீண்டும் வரலாம் என்று நினைக்கிறேன், நல்லதற்கோ, கெட்டதற்கோ, சத்தியமாய் இந்த ஆசை ஏன் வந்தது என்று தெரியவில்லை..

பயபுள்ளைக்கு என்ன ஆச்சோ என்று நினைத்துக்கொண்டிருக்கும் சக பதிவர்கள் மன்னிப்பார்களாக.. ஏனோ எழுதும் அந்த மூடே வரவில்லை, அதுதான் காரணம், நேரமின்மை, சோம்பேறித்தனம், வளர்ப்பு சரியில்லை என்று எதை வேண்டுமானாலும் காரணமாக தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப்பின் பொட்டி தட்ட உட்கார்ந்திருக்கிறேன். ம், பாக்கலாம்.. எத்தனை நாளைக்கின்னு.

மூட்டைப்பூச்சிக்கு மருந்து கேட்டு ஏகப்பட்ட மடல்கள், மன்னிச்சுக்குங்கய்ய, கமென்ட்ஸ் எல்லாம் ஆப்டிமைசேஷன்ல இருந்துச்சு, இன்னைக்கித்தான் பாத்தேன். மற்றும் பதிவிற்க்காக வைத்திருக்கும் பிரத்தியேக மெயிலை பார்ப்பதே இல்லை, தவறு தான்.

அதை ஏன் கேக்குறீங்க, நான் எழுதிய கடையில் இப்போது அந்த மருந்தெல்லாம் துபாய் முனிசிபாலிடி புண்ணியத்தில் கிடைப்பதில்லை. கரப்பானுக்கு நான் எழுதிய மருந்து கண்டிப்பாய் உபயோகமாய் இருக்கும், மூட்டைப்பூச்சி அனுபவம் சமீபமாய் எனக்கு இல்லை, கடவுள் புண்ணியம். முனிசிபாலிட்டியில் வேலை பார்க்கும் யாராவது தெரிந்தவர் இருந்தால் அவர்களிடம் இருந்து நன்கு வீரியமுள்ள பூச்சிமருந்து வாங்கி பயன்படுத்தலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றும் அமேசான் ஆன்லைனிலும் ஏதோ மருந்து இருப்பதாய் கேள்விப்பட்டேன். விசாரித்துக்கொள்ளலாம், கூகிளாண்டவரிடமும் பதில் இருக்கக்கூடும்.

அப்புறம், இனி தினமும் அல்லது வாரத்திற்கொரு பதிவாவது எழுதவேண்டும் என்ற எண்ணமிருக்கிறது, பார்க்கலாம். தமிழுலகு புண்ணியம் செய்திருக்கிறதா என்று:-)

அன்புடன்.. வசந்தா நடேசன்.

Wednesday, September 28, 2011

காளி கேசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அத்தனை பிரபலமாகாத ஒரு பிக்னிக் ஸ்பாட். இயற்கை அன்னை எங்கள் மாவட்டத்திற்கு அள்ளிக்கொடுத்திருக்கிருக்கும் வன வளத்திற்கு இந்த ஒரு பகுதியே சான்று. ஏனோ அரசாங்கமும் இந்த பகுதியை சுற்றுலா மையமாக்க ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடாததால் இது இதுவரை உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு இடமாக உள்ளது.




கண்ணாடி போல் தெளிந்த, குளிர்ந்த நீருடன் ஓடும் காட்டாறும், சிறு காளி அம்மன் கோவிலும் இங்கு பிரசித்தம். சுற்றிலும் ரப்பர் எஸ்டேட்டுகள், பாதிக்கு மேல் வனத்துரை மற்றும் அரசு ரப்பர் கார்ப்பரேஷன் என்று ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில். நம் கழக அரசுகளின் கட்டுப்பாட்டில் ரப்பர் எஸ்டேட் மற்றும் வனவளம்.. நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள் அந்த நிர்வாகம் எப்படி இருக்குமென்று. இங்கு வேலை பார்க்கும்
அரசு அதிகாரிகள் ரொம்ப ஷேமமாக இருப்பதற்கான எல்லா வசதிகளையும் இயற்கை அன்னை அளித்துள்ளாள்.

ரொம்ப மேலே செல்ல அனுமதி இல்லை, மேற்பகுதியில் சில தனியார் எஸ்டேட்கள் இருக்கின்றன.. அடியேனுக்கு அங்கு செல்ல வாய்ப்பேதும் இதுவரை கிட்டவில்லை.

என் சமீபத்திய சென்ற மாத விடுமுறையில், காளி கேசம் ட்ரிப் எதிர்பாராத விதமாய் அமைந்தது.. கன்னியாகுமரி என்று அஜென்ண்டாவில் இருந்தது சில பல காரணங்களால் காளிகேசம் என்று மாறிப்போனது. யாருக்கும் நான் வெஜ் மூடு எதுவும் இல்லாததால் உடுப்பி இன்டர்நேஷனலில் வாங்கிய நாலு பார்சல் பூரி கிழங்குடன் நாங்கள் பழைய காலத்து நண்பர்கள் நாலுபேர் எங்கள் பெங்களூர் நண்பன் புதியதாய் வாங்கியிருந்த டாட்டா மான்ஸாவில் கிளம்பி சென்றோம்.

பொண்டாட்டிகளை சமாளித்துவிட்டு தனியே கிளம்புவதே பெரிய சாகசம், நாலு பேரும் இப்போது நான்கு திக்கில் வேலை பார்ப்பவர்கள், நான் ஊருக்கு வரும் சமயம் எப்படியாவது மற்ற மூவரும் ஒன்று அல்லது இரண்டு நாள் ப்ரோக்ராம் வைத்துக்கொண்டு நாகர்கோவில் வந்து விடுவார்கள். அதற்கு ஏற்பாடு செய்வதற்குமுன் தாவு தீர்ந்துவிடும், பல ஈமெயில்கள் பறக்க வேண்டியதிருக்கும். சிலர் மனைவியுடன் வந்திருப்பார்கள், சிலர் தனியே.

ஏதோ ஆபிஸ் மீட்டிங் சென்னையில் என்று சொல்லி விட்டு சூட்கேஸ் சகிதம் நாகர்கோவில் வந்து லாட்ஜில் தங்கும் சில ஏமாற்று பேர்வழிகளும் உண்டு. நான் அப்போது மனைவியுடன் மாட்டிக்கொண்டிருப்பேன், கண்டிப்பாய் பெர்மிஷன் கிடைக்காது என் நண்பர்களுடன் தொடர்ந்து பல மணி நேரங்கள் தொடர்ந்து செலவு செய்வதற்கு. நாங்கள் நான்கு பேர் சேர்ந்தால் செய்யும் லூட்டிகள் அத்தனை உலக பிரசித்தம் ஆகிவிட்ட படியால்..

என்ன செய்வது, ஏதோ காரணத்திற்காக நான் திருநெவேலி அல்லது திருவனந்தபுரம் அவசரமாக போக வேண்டியுள்ளது என்று சொல்லி நான் இவர்களுடன் சேர்ந்தாக வேண்டும்.

ஆத்தாடி, அந்த அவஸ்த்தையை எழுத்தில் சொல்வது கடினம்.. அவர்கள் எல்லாம் வந்திருப்பார்கள், என் மனைவிக்கும் தெரியும்.. அவர்களை விட்டு விட்டு நான் தனியே வேரு ஊருக்கு கிளம்புகிறேன் என்பதை கிடைக்கும் குறைந்தபட்ச நேரத்தில் நம்ப வைப்பது எத்தனை சிரமம் என்று எனக்குத் தான் தெரியும்?? அப்படியும் ஏதோ சொல்லி சமாளித்து கிளம்பியாக வேண்டும்.

சரி பேக் டு காளிகேசம்.. மிக அருமையான சுற்றுலா பகுதி.. தெளிந்த ஓடும் நீரில் மூழ்கி குளிப்பது கண்டிப்பாய் ஒரு சுகானுபவம், துபாய் போன்ற பாலைவன நகரங்களில் கிடைக்காதது.

நான் சிறுவயதில் (கல்லூரி முதல் ஆண்டு??) முதல் முறையாக காளிகேசம் சென்றேன்.. ஒரு எட்டு அல்லது ஒன்பது நண்பர்கள் முதல் நாளே சிக்கன் மசாலா மற்றும் புரோட்டா, ரைஸ் என்று ஆர்டர் கொடுத்து எடுத்துச்சென்று அங்கு வைத்து தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்து, தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்ததெல்லாம் இப்போதும் நினைவில் இருக்கிறது. 5 கோழி கறி சொல்லியிருந்தோம், ஆனால் சாப்பிடும் போது பத்துக்கு மேல் கால் பீஸ் இருந்தது, இதை சொல்லிச்சொல்லி ஆர்டர் கொடுத்தவனை அழ வைத்தது தனிக்கதை.

இந்த மாதிரி கெட்டுகதர்களுக்கு ஏற்ற இடம். அப்போது பஸ் கீரிப்பாறையுடன் நின்று விடும், அதன் பின் காளிகேசம் வரை சில கிலோமீட்டர்கள் நடந்து செல்ல வேண்டும். ஆனால் இப்போது பஸ் காளிகேசம் கோவில் வரை செல்லும் என நினைக்கிறேன். ரோடு வசதி உள்ளது, பஸ் வசதியை விசாரித்துக்கொள்ளுங்கள்.

பின்னர் நினைவில் உள்ளது என் கல்லூரி மூன்றாம் ஆண்டில் கல்லூரி நண்பர்கள் இணைந்து சென்றது. அப்போது சிக்கன் ரவாபிரியாணி என்று ஒன்றை அங்கே சென்று சமைத்துச்சாப்ட்டோம். நன்றாகத்தான் இருந்தது, நான் முதலும், கடைசியுமாய் சாப்பிட்ட சிக்கன் ரவா பிரியாணி அது தான். சமையல் செய்ய ஆளை அழைத்துச்சென்றிருந்தோம். கல்லூரி நண்பர்களுடன் தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்து, தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்ததெல்லாம் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

பின்னர் நான் பெங்களூர் சென்றுவிட்ட நிலையில் என் மற்ற நண்பர்கள் அவர்கள் பெண் நண்பர்களுடன் சென்றதை கதை, கதையாக இப்போதும் சொல்வார்கள் என் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்வதற்காக. மூன்று அல்லது நான்கு பேர் ஜோடியாக இருக்கவும் ஒருவன் மட்டும் ஜோடி இல்லாமல் மற்ற ஜோடிகளை மறைந்திருந்து கவனித்து நேரம் போக்கியதை இந்த முறையும் சொல்லி சிரித்துக் கொண்டோம். (மக்கா, யார் வேண்டுமானாலும் நீங்கதான் அந்த ஜோடி இல்லாத ஆள் என்று தப்பித்துக் கொள்ளுங்கள், அதனால் பெயர் சொல்லவில்லை). அந்த ஜோடிகளில் ஒரு ஜோடி மட்டுமே திருமணம் வரை சென்றார்கள்..

எஸ், அடுத்த முறை கன்னியாகுமரி மாவட்டம் சென்றால் மறக்காமல் காளிகேசம் செல்லுங்கள், சமைத்து சாப்பிடுவதற்கும், மற்றவற்றுக்கும் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.. இது போல் காட்டுப்பிரதேசங்களில் சமைக்கப்படும் உணவிற்கு ஏதோ தனி சுவை உள்ளது, அதனை மிஸ் பண்ண வேண்டாம். மனைவிகளை அழைத்துச்சென்றால், தண்ணி அடிக்க முடியாது, சிகரட் குடிக்க முடியாது போன்ற சில்லரை பிரச்னைகள் உள்ளது, நன்கு யோசித்து முடிவு எடுங்கள்.




காட்டாறு மற்றும் சிற்றருவிகளை பற்றித்தெரிந்த குமரி மாவட்டத்து நண்பர்களை துணைக்கு அழைத்துச் செல்லுங்கள், சில இடங்கள் அபாயமானவை, ஆழம் தெரியாமல் காலை வைத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

அன்புடன், வசந்தா நடேசன்

Tuesday, September 27, 2011

கட்டிங், கட்டிங்..

வணக்கம் நண்பர்களே.

சிறுவயது மலரும் நினைவுகள் என்றுமே மனதுக்கு நிறைவானவை.. மீண்டும், மீண்டும் எத்தனை முறை வாழ்க்கையில் அசை போட்டாலும் அலுப்பை தராதவை. சிறுவயதில் முடிவெட்டிக்கொள்வதற்காக செய்த அளும்புகளை கொஞ்சம் அசை போட்டுப் பார்க்கிறேன்.

சிறு வயதில் எனக்கு குருவிக்கூடு வைத்து என் அம்மா தலை சீவி விடுவார்கள். நல்ல வேளையாக குடுமி ஸ்டைல் இருந்த காலத்தில் பிறந்து தொலைக்காமல் இருந்தேன் என்று பின்னர் நினைத்துக்கொண்டதுண்டு. இடது உச்சி எடுத்து தலை சீவிவிட்டு, வலது பக்கம் படிந்துள்ள முடியை அப்படியே பின்னால் கோறிவிட்டு ஒரு மூணு இஞ்ச் முன்னந்தலையில் விட்டு விட்டு வலதுபக்கமாய் பணித்து சீவி விட்டால் அதுதான் குருவிக்கூடு ஸ்டைல்.

மிகச்சிறு வயதில் எங்கே குருவி நெசமாலுமே குடி வந்துவிடுமோ என்று கொஞ்சம் பயம் இருந்தது நிஜம் தான். நீண்ட நாட்களாக, ஒரு அஞ்சாப்பு அல்லது ஆறாப்பு படிப்பது வரை ஐயா இந்த ஸ்டைல் தான். பின்னர் ஒரு சுப தினத்தில் இனி குருவிக்கூடு சரிவராது என்று வெறுமனே இடது உச்சி எடுத்து பணித்து சீவிக்கொள்ள ஆரம்பித்தேன்.

பின்னர் வந்தது பாருங்கள் ஹேர் ஸ்டைலில் ஒரு புரட்சி.. ஸ்டெப் கட்டிங் ஸ்டைல் வந்து எல்லா இளைஞர்களை பாடாய் படுத்தியது மறக்க முடியாதது. பொடிசுகள் முதல் இளைஞர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த ஸ்டைலாக இது இருந்தது.. வணங்காத முடியையும் ஹீட்டர் போட்டு ஒரு அளவுக்கு வளைத்து முக்கால் காதை மூடிக்கொண்டு தான் தமிழ்நாட்டில் எல்லோரும் நடந்தார்கள் என்று நினைக்கிறேன்..

சினிமா உலகிலும் இந்த ஸ்டைல் பிரபலம். ஒரு தலை ராகம் சுதாகர், கமல ஹாசன் என்று எல்லோருக்குமே ஸ்டெப் கட்டிங் ஸ்டைல் தான் ஒரு ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு. இடையிலேயே சுதாகர் எல்லாம் காணாமல் போனது வேறு கதை.

என்னுடைய அப்பா அப்போது முடி வெட்டிக்கொள்ளும் கடையில் தான் நானும் அப்போது முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது என் வீட்டில் எழுதாத சட்டம். கொஞ்சம் வளர்ந்ததும் இந்த சட்டத்தை மாற்ற நிறைய போராடியிருக்கிறேன். இப்போது ரோடுக்கொரு ஏ.சி சலூன் வந்து விட்ட நிலையில் நான் ஊருக்கு சென்றால் என் பையன் வெட்டிக்கொள்ளும் கடையில் நானும் முடி வெட்டிக்கொள்கிறேன், காலம் எவ்வளவு மாறியிருக்கிறது!

நானும் ஸ்டெப் கட்டிங் வெட்டிக்கொள்வதற்காக நிறைய சலூன்களை அப்போது மாற்றியிருக்கிறேன். நம் ஊர் சலூன்களில் ஹீட்டர் முதலிய அட்வான்ஸ் கருவிகள்(!) அறிமுகம் ஆனது அந்த காலம் தான். ஹீட்டர் போட்டுக்கொண்டால் முடி கொட்டி விடும், சீக்கிரம் நரைத்துவிடும் என்று பெருசுகளிடம் இருந்து மிரட்டல்களும் வருவதுண்டு.

பத்தாப்பு, பதினொண்ணாப்பு படிக்கும் போது யாருக்கு அதைப் பற்றி கவலை?? கலங்காமல் மாறி, மாறி ஹீட்டர் போட்டு பணிய வைத்த தலை என்னுடையது!

தெருவுக்கு தெரு அப்பாயிண்ட்மென்ட் எடுத்து/கொடுத்து சைட் அடித்த காலம் அது, இவள் செட்டாவாளா? அவள் செட்டாவாளா என்று அலைவோம். அப்போதெல்லாம் பெண்பிள்ளைகள் இவ்வ்வ்வளவு சோஷியலாய் இல்லை என்பது ஒரு குறைதான்.

கடைக்கண் பார்வைக்காக உயிரையே விட துணிந்திருந்த நம்மை முடி கொட்டிவிடும், நரை வந்துவிடும் என்பதெல்லாம் மிரள வைக்கவில்லை. முடிவெட்டிக்கொள்வதற்காக வடசேரியிலிருந்து செட்டிகுளம் ஜங்ஷன் வரை சைக்கிளை அளுத்திக்கொண்டு போயிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

பின்னர் வந்தது தான் இப்போதைய டிஸ்கோ கட்டிங்.. கார்த்திக், கமல் ஹாசன் எல்லாம் இந்த ஸ்டைலுக்கு முதலிலேயே மாறி விட்டார்கள். என்னுடைய நண்பன் ஒருவன் அவன்தான் நாகர்கோவிலிலேயே முதன் முதலாக இந்த ஸ்டைல் வைத்துக்கொண்டதாக இந்த பேச்சு வரும்போதெல்லாம் அப்போது பீற்றிக்கொள்வான்.

நான் இன்றுவரை அதே டிஸ்கோவுடன் நிறுத்திக்கொண்டாலும், (ஆமா.. இப்ப மாத்திட்டா மட்டும் நாம சைட் அடிக்கவா போகப்போறோம்? இல்ல வீட்டம்மா தான் உட்ருமா??)

ஆனாலும் இப்போது வித விதமாய் ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டு பைக்கில் சுத்தும் என் பையனைக் கண்டு கொஞ்சம் மிரண்டு தான் போயிருக்கிறேன்.

ம்ம், நாளை அவனுக்கு அசை போட இன்றைக்கு நிறையவே ஸ்டைல்கள் உள்ளன! நம் வாயிலேயே அந்த ஸ்டைல் பெயர்கள் நுழையவில்லை என்பது தான் நிஜம்.

அன்புடன், வசந்தா நடேசன்.

Monday, September 26, 2011

உங்கள் ரோல்மாடல் யார்??

நண்பர்களே, உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது.. உங்கள் ரோல்மாடல் யார் என்பதை ஒரு சிம்பிள் கணக்கின் மூலமாக மிக சுலபமாக கண்டுபிடிக்கவும் இப்போது அமெரிக்காவில் ஒரு ஃ.பார்முலா கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ம்ம்ம், எல்லாம் காலம் செய்த கோலம், என்னத்த சொல்ல?

நானும் போட்டுப்பார்த்தேன், என் ரோல்மாடலாக பில் கேட்ஸ் வந்தார்! என்ன துல்லியமான கணக்கென்று ஒரு நிமிஷம் ஆடிப்போய்விட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சுலபமாக நான் சொல்லஇருக்கும் இந்த மனக்கணக்கை போட்டுப்பாருங்கள், நீங்களே கண்டுபிடித்துவிடலாம் உங்கள் ரோல்மாடல் யார் என்பதை.

எச்சரிக்கை
எந்த காரணம் கொண்டும் ஸ்க்ரோல் டௌன் பண்ணக்கூடாது. மீறி செய்தால், ராத்திரி பல துர் சொப்பனங்கள் வரக்கூடும் என்பது இந்த கணக்கின் விதி.. விதியை மீறுபவர்கள் சங்கத்திலிருந்து தள்ளி வைக்கப்படுவார்கள் என்பதையும் அன்புடன் தெரிவிப்பது இப்போது என் கடமையாகிறது.

முதலில் 1 முதல் 8 க்குள் உங்கள் லக்கி நம்பர் ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும். ஒம்போது என்று சுருளிராஜன் போல் சொல்லக்கூடாது, விதி அனுமதிக்காது, கணக்கு தப்பானால் நிர்வாகம் பொருப்பாகாது

சரி, இப்போது உங்கள் லக்கி நம்பரை 3ல் பெருக்குங்கள்.

பெருக்கி வந்த விடையுடன், 3 ஐ கூட்டவும்.

மீண்டும் ஒருமுறை மேலே கண்டுபிடித்த விடையை 3ல் பெருக்கவும்.

இப்போது உங்களுக்கு சர்வ நிச்சயமாய் ஒரு இரண்டு இலக்க எண் கிடைத்திருக்கும். (உதாரணத்திற்கு 75 என்று வைத்துக்கொள்வோம்.)

நீங்கள் கண்டுபிடித்த இரண்டு இலக்க எண்ணைக் கூட்டவும். (உதாரணம் 7 + 5 = 12)

இப்போது ஸ்க்ரோல் டௌன் செய்து, உங்கள் லக்கி நம்பரை வைத்து நீங்கள் கண்டுபிடித்த எண்ணுக்குரிய நபர், உங்கள் ரோல்மாடல் யார் என்று கண்டுபிடிக்கவும்.



1) மகாத்மா காந்தி


2) ஜவகர்லால் நேரு


3) மன்மோகன் சிங்


4) சோனியா காந்தி


5) சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்


6) பத்மஸ்ரீ கமல்ஹாசன்


7) டாக்டரு விஜய்


8) தல அஜீத்


9) வசந்தா நடேசன்


10) தலாய் லாமா


11) பில் கேட்ஸ்


12) மதர் தெரஸா


எனக்குத்தெரியும், முதலிலேயே தெரியும்... அப்படி பார்க்காதீர்கள், வெட்கமாக இருக்கிறது.. நான் பதிவுலகிற்கு வந்து இந்த சிறிது காலத்திலேயே இந்த அளவுக்கு வேல்டு பேமஸ் ஆவேன் என்று முன்பு நினைத்ததில்லை. நீங்களும் முயற்சி செய்யுங்கள், ஒரு நாள் நிச்சயம் என்னைப்போல் வரமுடியும், வாழ்த்துக்கள்.

டிஸ்கி:- தயவு செய்து வேறு வேறு நம்பர்களை தேர்வு செய்து பெருக்கி, கூட்டுவதை நிருத்தவும், எந்த நம்பரை தேர்வு செய்தாலும் நான்தான் உங்கள் ரோல் மாடல்???? அப்படியே வைத்துக்கொள்ளுங்களேன், உலகம் நின்றுவிடவா போகிறது??? நான் ஒன்றும் தப்பாக நினைக்க மாட்டேன்!!!!!! சின்னபுள்ள தனமால்ல இருக்கு??

அன்புடன், வசந்தா நடேசன்.

Sunday, September 25, 2011

பாத்து யோசி!

உலகில் எல்லாவற்றுக்கும் எதிர்வினை உண்டு அல்லவா? ஏன் வயதான ஆண்களுக்கு (கிழவர்களுக்கு?) இளம்பெண்களின் மீதும், இளைஞர்களுக்கு வயதான பெண்களின் (ஆண்ட்டிகளின்) மேலும் ஆசை (அதாங்க..) வருகிறது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? இது எதன் எதிர்வினை?

வீட்டில் சும்மா டீவி யில் பழைய பாட்டுக்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது மனதில் ஓர் எண்ணம் வந்தது. எண்ணத்தில் வந்ததை எழுத்தில் வடிப்பது நம் கடமை என்பதால் நீண்ட நாட்களுக்குப்பின் பெட்டிதட்ட உட்கார்ந்துவிட்டேன்.. (ம்ம்ம், நாங்கல்லாம் உக்காந்து யோசிப்போம்ல???)

நடுத்தர வயதில் இருக்கும் எனக்கு ஏனோ இந்த யோசனை வந்து தொலைத்தது, யோசனை நீண்டபோது வந்த எண்ணங்கள் தான் மேலே வருபவை.. நினைத்தாலே இனிக்கும் தினமும் பார்ப்பதாலும், பத்திரிகைகள் அடிக்கடி படித்ததாலும் தெரிந்தோ, தெரியாமலோ இப்படி ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது.. தவறென்றால் மன்னிக்கவும்.

ஒரு காலத்தில் நம் ஹீரோக்கள் வெகு ஆர்வமாய் இளம் நடிகைகளுடன் நடித்திருக்கிறார்கள், எம்.ஜி.ஆர் மற்றும் மஞ்சுளா நடித்த ஒரு பழைய பாட்டை இப்போது பார்த்தாலும் எனக்கு பற்றிக்கொண்டு வரும். தற்போதைய முதல்வருடன் நடித்த சில படங்களையும், பிற நடிகைகளையும் இந்த பட்டியலில் சேர்த்து உங்க வைத்தெரிச்சலை கொட்டிக்காம நம்ம சிவாஜி சாருக்கு வருவோம்.. இவர் ஸ்ரீப்ரியாவுடன் நடித்த சில பல படங்களும் அப்படியே, இது அந்த வேகத்தில் ராதா, அம்பிகா வரை தொடர்ந்தது.

இதை யெல்லாம் பார்த்து, ரசித்த இப்போது நாற்பது, ஐம்பது வயதை கழித்த நம் வெகுஜனம் அக்காலத்து அவரவர் ஹீரோக்கள் பாணியில் இப்போது இளசுகளின் மேல் விபரீதமாய் ஆசை வந்து பஸ், கூட்ட நெரிசல் என்று கண்ட இடத்திலும் ரவுசு பண்ணுகிறார்களோ?

மனதளவில் தன் ஆதர்ஷ ஹீரோக்களை நினைத்துக்கொண்டு இன்று இளசுகளை பக்கத்தில் பார்த்ததும் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு இப்படி கண்றாவியாய் நடந்து கொள்கிறார்களோ என்னவோ?

சரி, ஆண்டிகளின் மேல் ஏன் இளைஞர்களுக்கு ஆசை?? இது எதன் எதிர்வினை என்று யோசிக்கையில் இப்படித்தான் தோன்றுகிறது.

முன்பெல்லாம் சினிமாவில் நடன நடிகைகள் என்று தனியாக நடிகைகள் இருந்தனர். ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா என்று எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து ஆரம்பித்தால் அது டிஸ்கோ சாந்தி, விசித்திரா என்று சுருங்கி இப்போது பாபிலோனாவில் முடிந்து விட்டது என்றே நினைக்கிறேன். கவர்ச்சி ஆட்ட நடிகைகளின் வயதை கணக்கில் எடுத்தால் அவர்கள் அனைவருமே பீக்கில் இருந்தபோது குறைந்தது வயது 22க்கு மேல்தான் இருக்கும்.

இப்போதெல்லாம் கவர்ச்சி ஆட்டத்திற்கென்று தனியே நடிகைகள் இல்லை, சில முன்னணி நடிகைகள் எப்போதாவது ஏதோ ஒரு படத்தில் குத்தாட்டத்திற்கு வந்தாலும் அது பழைய மாலினிகளின் ஆட்டத்திற்கோ சில்க் ஸ்மிதாவின் ஆட்டத்திற்கோ ஈடு இணை ஆக முடியாது, குறைந்த பட்சம் ஆடை விஷயத்தில்.

தற்போதைய இந்த கவர்ச்சி ஆட்ட வறட்சியால் இந்த பழைய ஆட்டத்தை இப்போதும் பார்க்கும் 22க்கு குறைந்த இளைஞர்களுக்கும் சரி, சராசரி 20 வயதுக்கு மேலான தற்போதைய நடிகைகளின் நடிப்பை பார்க்கும் 18க்கும் கீழான இளசுகளுக்கும் சரி, தன்னை விட மூத்த நடிகைகளின் மேல் ஒரு கிக் இருக்கத்தான் செய்யும், சத்தியமா எனக்கு கிடையாது, தயவுசெய்து நம்புங்கள்.

இப்படி குறைந்த வயது இளசுகள் தங்களை விட வயதில் மூத்த இதுபோல் நடிகைகளின் ஆட்டத்தால் கவரப்பட்டு மனதளவில் இப்படி ஆண்டிகளின் மேல் ஆசையாய் எதிர்வினையாகி விட்டதோ?? கவர்ச்சியாய் ஆடை உடுத்திக்கொண்டு வரும் சாதாரண பெண்களை பார்த்ததும் மனதளவில் தூண்டப்பட்டு ஆண்ட்டிகளை கண்டதும் ஆட்டம் கண்டு விடுகிறார்களோ??

ம்ம்ம், என்ன கண்றாவியோ, நான் சினிமாவையோ, முன்னாள் ஹீரோ, ஹீரோயின்களையோ அவமதிப்பதற்காக இப்படி எழுதவில்லை, நானும் ஒரு காலத்தில் இதே ஹீரோக்களை போற்றி முதல் காட்சிக்கு ஓடியவன் தான், ஏதோ மனதில் தோன்றி விட்டது, எழுதிவிட்டேன், தவறென்றால் மன்னிக்கவும், மனசுல ஒண்ணும் வச்சிக்காதீங்கப்பூ…

அன்புடன், வசந்தா நடேசன்.

Sunday, August 7, 2011

கலைஞர் சொத்து

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.

இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

லாலுவோ சும்மா கிரங்கிப்போய் கெடக்காராம்.
மாயாவதி மலைச்சிப்போய் நிக்கராங்களாம்.
சோனியா சும்மா சொக்கிப்போய் படிச்சாங்களாம்.

அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியல்:

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.

ம்ம்ம்ம், வாழ்த்துக்கள் தலைவா ன்னுதான் சொல்லணும், வேற என்னத்த சொல்ல? அம்மையாரும், சசிகலாவும் என்னென்ன வச்சிருக்காங்களோ, இல்ல இப்பதான் சேத்துகிட்டு இருக்காங்களோ? அது எப்பவாவது வந்தா அதையும் போட்டுடறேன்.

அன்புடன், வசந்தா நடேசன்.

நன்றி தட்ஸ்தமிழ் ஒன் இந்தியா.

Wednesday, August 3, 2011

திருப்பம்

வாழ்வில் ஏதேதோ நாம் நினைக்காத பல விஷயங்கள் பல சமயங்களில் நடந்து விடுகிறது. அதற்கெல்லாம் நாம் காரணம் தேடினால் பெரும்பாலும் கிடைப்பதில்லை.

என்னைப்பொருத்தவரை நான் ஒரு பெரும் எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக இந்த பதிவுலகிற்கு வரவில்லை. ஏதோ பொழுதுபோக்கு. சில காலங்கள் ஏதோ தோன்றியது, எழுதினேன், பின்னர் ஒரு சிறு இடைவெளி விடும் கட்டாயம் வந்தது. பின்னர் நான்கு மாதங்கள் கழித்து இப்போது மீண்டும் ஒரு தொடக்கம்.

சரிப்பா, எங்க போன இந்த நாலு மாசம்? என்று ஒரு கேள்வி பிறப்பது இயல்பு. மனிதனுக்கு பல சமயங்களில் பல பொழுதுபோக்குகள், சில நாலு மாதமாய் நான் சினிமா பார்ப்பதை பொழுதுபோக்காய் கொண்டிருந்தேன். ஒரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், இந்த சினிமா பைத்தியம் பிடிப்பதற்குமுன் ஊரில் நான் தியேட்டருக்குப்போய் சினிமா பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. என் மனைவியும் அதற்கு வற்புருத்தியதில்லை, அதனால் தப்பித்தேன்.

சிறுவயதில் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன், வாழ்வில் பணத்திற்கான தேடலில் மூழ்க ஆரம்பித்தபின் சினிமாவுக்கான ப்ரியாரிட்டி குறைந்து போனது, எப்போதாவது நேரம் கிடைக்கும் போது டிவி யில் பார்த்தால் தான். கடைசியாக நான் தியேட்ருக்கு சென்று சினிமா பார்த்தது கோகுலத்தில் சீதை என்ற ஒரு அர்ஜீன் படம். குடும்பத்துடன் தான், என் மனைவியுடன் முதலில் பார்த்த படம். நாகர்கோவில் தங்கம் தியேட்டரில் என்று ஞாபகம்.

இங்கே துபாய் ஜீவிதம் ஆரம்பித்ததும், சில பல நேரங்களில் அலுவலக நண்பர்களுடன் சினிமாவிற்கு போனதுண்டு. ஓசி டிக்கெட். புதிய தமிழ் சினிமாக்கள் வரும்போது சில சமயங்களில் எங்களுக்கு 10 அல்லது 15 ஓசி டிக்கட்டுகள் கிடைக்கும், ஷிப்பிங் கம்பெனிகளில் இருந்து கொடுப்பார்கள்.

அதற்குப்பின் கழிந்த நாலு மாதங்களில் தினமும் ஒரு சினிமா பார்த்திருப்பேன், சமீபத்திய வெப்பம் சினிமா முதல் ஒரு நாலு வருடங்களுக்கு முன் வரை வெளிவந்த எல்லா முக்கியமான சினிமாக்களும் முடித்து விட்டேன். ஏதோ ஆவேசம் வந்தது போல் தினமும் டொவுன்லோட் செய்து ஒன்று அல்லது இரண்டு சினிமாக்கள்.

அப்போது தான் புரிந்தது, சினிமாவில் இருக்கும் மோகம் எத்தகையது என்பது. நானும் ஒரு காலத்தில் சிவாஜி ரசிகன் தான், பின்னர் புன்னகை மன்னன் வெளிவந்த போது முதல் நாள் (தீபாவளி அல்லது பொங்கல் அன்று?) முதல் காட்சிக்கு அடித்து பிடித்து போனது நினைவில் உள்ளது. ஆனால் அப்போதைய புரிதல் வேறு, இப்போதைய புரிதல் வேறு.

சரி, இனி பார்ப்பதற்கு புதியதாய் ஏதும் இல்லை என்ற ஒரு நிலை வந்ததும், அடுத்த பொழுது போக்காய் பொட்டி தட்ட வந்து விட்டேன். மன்னிக்கவும் இனி மொக்கைகள் தொடரும், எனக்கான அடுத்த தேடல் அல்லது அடுத்த பொழுதுபோக்கு மாட்டும் வரை கொஞ்சம் கஷ்டம் தான், பொருத்துக்கொண்டு அவ்வப்போது வந்து செல்லுங்கள்.

ஒரு விஷயம் உறுதி செய்து கொண்டேன், இனி தமிழ்மணம் அல்லது இன்ட்லியில் பதிவதில்லை, இந்த நாலு மாதங்களில் பல சமயங்களில் பல விஷயங்கள் இணையத்தில் வாசிக்கவும் செய்தேன். என் எழுத்தின் தரம் என்ன? என்ற ஒரு புரிதல் வந்துவிட்டது.

ஒருவேளை அப்படி ஒரு தரம் உள்ளது என்றோ அல்லது இதை பலர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ கண்டிப்பாக தமிழ்மணத்தில் பதிகிறேன். இனி முடிந்தவரை தினமும் சந்திக்கலாம்.

அன்புடன்

வசந்தா நடேசன்