Tuesday, January 4, 2011

நண்டு கறி

விடுமுறை நாட்கள் துபாயில் கொஞ்சம் விஷேசமானவை. நான் துபாயில் இருப்பதால் துபாய் என்கிறேன், இந்தியாவை விட்டு வெளியே வாழும் எல்லா இடங்களிலும் இப்படியே இருக்கக்கூடும். அதுவும் என்போல் குடும்பத்தை பிரிந்து பிழைப்பிற்க்காக பிரிந்து வாழ்பவர்களுக்கு இந்த இடையிடையே வரும் விடுமுறை நாட்கள் குதூகலமானவை.

நண்பர்கள் எல்லாம் ஓரிடத்தில் கூடி பேசி மகிழ்ந்து அரட்டைக்கச்சேரி நடத்தும் நாட்கள். தினமும் பாத்த மூஞ்சியையே பார்த்துக்கொண்டிருப்போம், ஒவ்வொரு வீட்டிலும் ஸ்டேண்டர்டாக ஒரு 7 நாள் மெனு இருக்கும். சனிக்கிழமை இது, ஞாயிற்றுக்கிழமை இது.. இப்படி எப்போதும் ஒரே ஃபுட். புதிதாக செய்வதற்க்கு நேரம் இருந்தாலும் மனம் வராது. இதுவே போதுமென்று ஒரே பாணியில் போய்க்கொண்டிருக்கும் .

என்னைப்பொருத்தவரை இங்கே இரண்டு நாள் சேர்ந்தார் போல் லீவு வருவது கொஞ்சம் அபூர்வம், அரசு துரைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வெள்ளி. சனி இரண்டு நாட்களும் விடுமுறை. மற்றும் சிலபல ஸ்டேண்டர்டு பெரிய கம்பெனிகளுக்கும் அப்படியே.

நான் வேலை பார்ப்பதும் ஸ்டேண்டர்டு கம்பெனி தான், இருந்தாலும் எங்களுக்கு அப்படி இல்லை. வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரை நாள் வேலை எனக்கு. வெள்ளி விடுமுறை.

போனவாரம் கிறிஸ்மஸ் என்பதால், சனிக்கிழமை விடுமுறை, இந்தவாரம் புத்தாண்டு என்பதால் சனிக்கிழமை விடுமுறை.

போனவாரம் தஞ்சை மற்றும் கோவையைச்சேர்ந்த நண்பர்கள் இருவர் வீட்டிற்க்கு வந்திருந்தனர். தஞ்சைக்காரர் சிறந்த கைப்பக்குவம் கொண்டவர். நெய்ச்சோறும், மட்டன் குருமாவும் அவரது ஸ்பெஷாலிட்டி.

நேற்று நண்டு வைப்போமா? என்றார். நான் இதுவரை நண்டு சாப்பிட்டதில்லை. எங்கள் வீட்டிலோ அல்லது எங்கள் சொந்தபந்தங்களோ யாரும் இதுவரை வைத்ததில்லை, என் மனைவிக்கும் சமைக்கத்தெரியாது என்றே நினைக்கிறேன்.

ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் ஆபிஸ் டின்னர்களில் உடன் வேலைசெய்பவர்கள் எடுத்து சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். நான் ஒதுங்கி விடுவேன், நான்வெஜ் என்றால் என்னைப்பொருத்தவரை, மட்டன், சிக்கன், மீன் மட்டுமே.

சரி வித்யாசமாக இருக்கட்டுமே என்று எல்லோரும் ஓகே என்றதால் இன்றைய ஸ்பெஷல் நண்டுகறியென முடிவாயிற்று. முடிவானதும் பரபரவென எல்லாம் வாங்கிவந்து மணக்க மணக்க நண்டு கறியும், நெய்ச்சோரும் ரெடியானது.

எல்லாம் முடிந்ததும் எல்லோரும் சுற்றி அமர்ந்து ஒரு வெட்டு வெட்டினோம். சும்மா சொல்லக்கூடாது, சூப்பர் என்று தான் சொல்லவேண்டும், ஓட்டை உடைத்து எப்படி சாப்பிடுவது என்பதும் கற்றுக்கொண்டேன். அருமை, அருமை என நீண்ட நாட்களுக்குப்பிறகு மிக அருமையான ஒரு சாப்பாடு.

அது ஏனோ நண்டு வாங்குவதென்றால் பௌர்ணமிக்கு பின்பு வளர்பிறையில் தான் வாங்க வேண்டுமாம், நண்டு கொழுத்து நன்கு வளர்ந்து இருக்குமாம்.., தேய்பிறையில் வாங்கினால் நண்டு தேய்ந்து மெலிந்து போய் இருக்குமாம், (தாய்குலம்லாம் நோட் பண்ணிக்கோங்க) என்ன லாஜிக்கோ புரியவில்லை ஆனால் நாங்கள் வாங்கிய நண்டுகள் எல்லாம் நன்கு கொழுத்திருந்ததாகவே நினைக்கிறேன். எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் நண்டு ஓடுகள் ஓட்டை ஒடிசல் மலை போல் குமிந்திருந்தது!

அப்படியே நியூஇயர் பிளான்களும், எங்கு செல்வது என்ன செய்வது எல்லாம் முடிவாகி நியூஇயர் அன்று மதியம் சிக்கன்பிரியாணி என்றும் முடிவாகி அதுவும் அருமையாக கழிந்து விட்டது, (தப்பிச்சீங்க, பிரியாணி கதை படிக்கவேண்டி வராது!)

இனி ஒரு நீண்ட விடுமுறையில்லா காலத்திர்க்குள் கால் வைத்தது போல் உள்ளது. ஆம் இனி இங்கே நோண்புப்பெருநாள் வரும்வரை ஒரு நீண்ட நெடிய பயணம் போகவேண்டும். விடுமுறை இல்லா பெரும்பயணம். இப்போதே ஆபிஸில் ஆப்படிக்க ஆரம்பித்து விட்டார்கள்,

இரண்டு நாட்களாய் உங்களுடன் பேசக்கூட நேரமில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். லீவு எடுத்தில்ல, வீட்டுக்கு கொண்டுபோய் வேலைபாப்பியோ என்ன செய்வியோ எனக்கு இப்ப ரிப்போர்ட் வேணும்னு அடம் புடிக்கிராய்ங்க சார், அதுல வேர ஐரோப்பிர்களெல்லாம் ஜாலியாக அவர்களின் நீண்ட விடுமுறையைக் கொண்டாடிவிட்டு இன்று தான் திரும்பி வந்து விட்டதெல்லாம் இன்னைக்கே புடிக்கணும்னு பறக்கிறாங்க, அஞ்சமாட்டோம்ல வந்த அத்தனை ஈமெயில்களுக்கும் ஆப்படித்தாகிவிட்டது. நேற்று எங்கடா போனீங்கன்னா, பயபிள்ளைகளுக்கு சனிகிழமை நியூஇயர் வந்ததால் திங்கள் லீவாம், இந்த வயித்தெரிச்சலை எங்கபோயி சொல்வது?

யாரவது ஒரு லண்டன் விசா குடுங்க சார், நல்லா இருப்பீங்க.

அன்புடன், வசந்தா நடேசன்.

2 comments:

  1. துபாய்ல இருக்குற உங்களை நெனச்சு எங்களுக்கு பொறாமையா இருக்கு. உங்களுக்கு லண்டன் விசா கேக்குதா ?
    நண்டு குழம்பு சாப்பிட்ட திருப்தி உங்க பதிவு படிச்சதில

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி, துபாய் வாழ்க்கை நன்றாகத்தான் உள்ளது, இக்கரைக்கு அக்கரை பச்சை கதைதான் சார்! சென்ற மாதம் எழுதிய அயல் நாட்டு அகதிகள் என்ற பதிவைப்படிக்கவும்.

    ReplyDelete