Monday, March 14, 2011

குழந்தை தொழிலாளர்கள்!

இன்று சன் டிவியில் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன், மிகவும் மனதை பாதித்ததால் அதை பற்றிய ஒரு பதிவு இங்கே. நிகழ்ச்சியை பார்த்தவர்கள் மேலே தொடரவேண்டாம், சன் டிவியை விட நான் அதிகம் சொல்லப்போவதில்லை.. இது என் பாணியில், என் பார்வையில். (நம்ம கடைக்கு வார ஒரு முப்பது கஷ்டமருக்காக??)

நம் சமூகம் இன்னும் எத்தனை விஷயங்களில் மறுமலர்ச்சி அடையவேண்டியதிருக்கிறது என்பதை நினைத்தால் ஒரு வித திகைப்பே மிஞ்சுகிறது.. இத்தனைக்கும் இதை தடுக்க பல சட்டங்களும் பல அரசு அதிகாரிகளும் இதற்க்காக நம் நாட்டில் வேலை செய்கிறார்கள்.

சிவகாசி போன்ற தொழில்வழம் மிக்க நகரங்களில் இந்த அதிகாரிகள் கொஞ்சம் வேலை பார்த்து சில வற்றை கண்டு தடுத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.. பிற நகரங்களில் இவர்களுக்கு வியாபார நிறுவனங்களை மிரட்டி காசு வாங்குவதற்கே நேரம் சரியாக இருக்கிறது போலும்!

ஆனாலும் இன்று நான் பார்த்தது தொழில் சார்ந்ததில்லை.. சொல்லப்போனால் பல வருடங்களுக்கு முன் இது போல் ஒரு சம்பவம் நம் தமிழ்நாட்டிலும் நடந்தது நினைவு இருக்கிறது.. பத்து வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்று பார்த்தது, தமிழ்நாட்டிலிருந்து இரண்டு பதினாலு வயதுக்கும் குறைந்த பருவம் கொண்ட சிறுமிகளை கேரளாவுக்கு வேலை செய்ய அனுப்பியிருக்கிறார்கள், ஒரு ஏழை தாயும், தகப்பனும். பள்ளியில் படித்தவர்களின் படிப்பையும் நிறுத்தி. மிக குறைந்த அளவு பணம் வாங்கிக்கொண்டு. பண ஆசையா?? இல்லை, படித்துக்கொண்டிருந்த குழந்தைகளை என்னுடன் கேரளாவுக்கு வேலைக்கு அனுப்பி வை, மாதம் நல்ல சம்பளம் தருவார்கள் என்று வற்புருத்தி தாயின் அண்ணன் முறையிலான ஒருவரே அழைத்துச்சென்றிருக்கிறார்.. அழைத்துச்சென்றவருக்கும் அவர் மலையாளி பெண் பார்ட்டனுருக்கும் இதில் கிடைத்தது 15000 ரூபாய்கள்.

அங்கே போனதிலிருந்தே ஒரு குழந்தையை நாய் கூண்டில் அடைத்து வைத்து சாப்பாடு கொடுக்காமல் வேலை வாங்கி, சிகரட் சூடு, அடுப்பிலிருந்து எரியும் நெருப்பை வைத்து சூடு போட்ட காயங்கள் இத்யாதி, இத்யாதி... முடிவில் குழந்தை 15 நாட்களிலேயே கொடுமை தாங்காமல் இறந்து விட்டது.

இன்று அந்த மலையாளி தம்பதியை கைதுபண்ணியிருக்கிறார்கள், எல்லாம் நடக்கிறது, தண்டனை கிடைக்கும் என்று நம்புவோம், நான் சொல்ல வந்தது இனி என்ன நடக்க வேண்டும், எப்படி இதை தடுப்பது என்பதை பற்றி சிறிது அலசவே.

கேட்ட இன்னொரு அதிர்ச்சி தகவல், கேரளத்தில் இதுபோல் கிட்டதட்ட 5000 குழந்தைகள் வேலை செய்கிறார்களாம், இதற்கான நெட்ஒர்க் பல வருடங்களாய் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டதட்ட ஒரு வேனில் பல குழந்தைகளை அடைத்து வைத்து கொண்டு போய் வேண்டியவர்களுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தன்னார்வ தொண்டர் பேசினார். என்ன கொடுமை சார் இது??

சரி, இனி என்ன பண்ணலாம் என்று என் பார்வையில்.. (சன் டிவியில் சொல்லாதது!!)

தமிழகத்தில் இது பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை உடனே கொண்டுவரவேண்டும், பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் டிவி விளம்பரங்கள் மூலம் இது சாத்தியமாகலாம், அஃப்கோர்ஸ் அரசு தான் இதில் தலையிடவேண்டும். இப்போது இதற்காக இருக்கும் அரசு அலுவலர்களுக்கு இது குறித்த விழிப்பணர்வு பயிற்ச்சி வகுப்புகள் எடுத்து கொஞ்சம் வேலை செய்ய சொல்லலாம்.

பள்ளிகளில் படிக்கும் பதினைந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் படிப்பை திடுதிப்பென்று நிப்பாட்டினாலோ அல்லது அடுத்த வருடம் படிப்பை தொடராவிட்டாலோ அது குறித்து பள்ளிகள் உடனடியாக பக்கத்தில் இருக்கும் தொழிலாளர் துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்கள் இது குறித்து விசாரித்து ஒரு அறிக்கை தயாராக்க வேண்டும். இதுவும் அரசின் கைகளில்.. சட்டமாக்கப்பட வேண்டும். பின்னாளில் காணாமல் போன குழந்தைகள் என்றால் நேராக தொழிலாளர் துறைக்கு மக்கள் நடக்கும் நிலை வரவேண்டும்.

சரி எல்லாம் அரசிற்கே விட்டால் பொதுஜனத்திற்கு என்ன வேலை?? நமக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் விழிப்பணர்வு தேவை மக்களே!! நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால் இது குறித்து உடனே குழந்தைகளின் பெற்றோரை அழைத்து விசாரிக்கலாம் நம் அரசு விழித்துக்கொள்ளும் வரை.

நீங்கள் ஒரு வாடிக்கையாளராக எங்காவது குழந்தை தொழிலாளர்களைக்கண்டால் உடனே இது குறித்து தொழிலாளர் துறைக்கு ஒரு புகார் அனுப்பலாம்.

முக்கியமாக உங்கள் பக்கத்து வீட்டிலோ அல்லது உங்கள் பார்வையிலோ ஏதும் இது போல் கொடுமை நடக்கிறது அல்லது குழந்தை காணாமல் போகிறது என்றால் உடனே உடனே இது குறித்து தொழிலாளர் துறைக்கு ஒரு புகார் அனுப்பலாம். அட்லீஸ்ட் காவல் நிலையத்துக்கு ஒரு அனானி கால் பண்ணியாவது சொல்லுங்கள் பொதுஜனமே!

இது குறித்து பல விவாதங்களும், விழிப்புணர்சியும் பரவலாக வேண்டும் என்பதே என் ஆசை..

அன்புடன், வசந்தா நடேசன்.

9 comments:

  1. சிறுவர்களை, அதுவும் வறிய சிறுவர்களை அடிமைகளாக நடாத்தி வேலை வாங்கும் எம்மவர்கள் எல்லோரும் எப்போது தான் திருந்துவார்களோ? சமூக விழிப்புணர்வு வேண்டிய பதிவு வரவேற்கிறேன். ஆனால் எம்மவர்களில் எத்தனை பேர் இவ்வாறு சிறுவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வை வளம் படுத்த முயற்சி செய்கிறோம் என்பது கேள்விக் குறி. கேரளத்தில் 5000பேர் குழந்தைத் தொழிலாளிகல்? இது நாளை தமிழகத்திற்கும் வேகமாக பரவலாம். ஆகவே பிரச்சாரங்களை முன்னெடுத்து, நாட்டினையும், சிறுவர்களையும் பாதுகாப்பதே ஒரே வழி.

    ReplyDelete
  2. vilippunarchchi thevai..good post . vaalththukkal

    ReplyDelete
  3. கேரளத்தில் 5000 தமிழ் ஏழை குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனராம் நண்பரே..

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பர்களே..

    ReplyDelete
  4. இந்தச் சிறுவர்கள் விஷயம் சின்ன விஷயம் இல்லை
    படிப்பவர் அனைவரும் உணரும்படி எழுதப்பட்ட
    சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு இது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. சமூக விழிப்புணர்வு வேண்டிய பதிவு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. அனைத்திலும் சிறப்பான கேரளாவில் இப்படி கொடுமை நடப்பது வருத்தம் அளிக்கிறது.. அடிமாட்டு வேலையை விட அதீத வேலையை வாழ்க்கையே வேண்டாம் என்று கதறும் அளவிற்க்கு இதில் குழந்தைகளை ஈடுபடுத்திய பாவிகளுக்கு வழங்கவேண்டும்.. அப்போது தான் மற்றவர் இதற்கு துணியார்..

    ReplyDelete
  7. சரி அதை விடுங்க. சினிமாக்களில் குழந்தைகளை நடிக்கவைக்கிரார்களே அது தவறில்லையா ???

    ReplyDelete
  8. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பர்களே.. பொதுவாக எல்லோரும் இதே மனநிலையில் இருப்பது மனதிற்கு நிறைவை தருகிறது.. ஒரு காலத்தில் இந்த விழிப்புணர்ச்சி வரும் என்று நம்புவதை தவிர நமக்கு வேறு வழி இல்லை.

    எல் கே.. சினிமாவில் பிறந்த குழந்தைகளை நடிக்க வைப்பது தவறுதான். அதிலும் ஒரு படத்தில் பச்சை மழலையை கிள்ளி அளவைப்பது போல் காட்டுவார்.. கொடுமை. அதே நேரம் விபரம் வந்த சிறு குழந்தைகள், தான் நடிக்கிறோம் என்ற நினைப்புடன் நடித்தால் தவறில்லை என்பது என் கருத்து. இல்லையென்றால் அஜீத் ஒரு ஷாலினியை இழந்திருக்கக்கூடும்..;)

    ReplyDelete
  9. அழ வைப்பது?? தவருக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete